தேசிய செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளர் பதவி விலக விருப்பம் - மேலும் 2 வாரங்கள் தொடர மோடி அறிவுறுத்தல்

பிரதமரின் முதன்மை செயலாளர் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். அவரை மேலும் 2 வாரங்கள் தொடர பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருப்பவர் நிரிபேந்திர மிஸ்ரா. கடந்த 2014-ம் ஆண்டு முதல் அந்த பணியில் இருந்து வரும் மிஸ்ரா, திடீரென பதவி விலக விருப்பம் தெரிவித்து உள்ளார்.

மிஸ்ராவின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக (முதன்மை செயலாளர்) கேபினட் முன்னாள் செயலாளர் பி.கே.சின்கா நியமிக்கப்பட்டு உள்ளார். எனினும் மேலும் 2 வாரங்களுக்கு அந்த பணியில் தொடருமாறு மிஸ்ராவை, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவருக்கு பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், மிகச்சிறந்த அதிகாரிகளில் நிரிபேந்திர மிஸ்ராவும் ஒருவராக உள்ளார். பொது கொள்கை மற்றும் நிர்வாகத்தை விரைவில் உள்வாங்கும் திறன் பெற்றவர். 2014-ம் ஆண்டு டெல்லிக்கு நான் புதியவனாக வந்தபோது அவர் எனக்கு ஏராளம் கற்றுத்தந்தார். அவரது வழிகாட்டல்கள் மிகவும் மதிப்புமிக்கதாக உள்ளன என்று கூறியிருந்தார்.

நிரிபேந்திர மிஸ்ராவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் மோடி தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT