புதுடெல்லி
எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இது நாட்டிற்கு நல்லதல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி அசாத் ராஜ்யசபாவில் ஆவேசமாக பேசினார்.
பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உரையாற்றியபோது,
நாடு பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகின்றன. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளை ஏவிவிட்டு அரசியலை பா.ஜ. நடத்துகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், தொழில் சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது. முத்தலாக் சட்டம் சமுதாயத்தை பிரிக்கும் முயற்சியாக உள்ளது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் புகாருக்கு மத்திய அமைச்சர் அன்ந்தகுமார் மறுப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறினார்.