புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசும்போது, மக்கள் தொகை பெருக்கம், பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்படவேண்டியதின் முக்கியத்துவம், ஒருமுறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக்கை கை விட வேண்டியதின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் வரவேற்று டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், சுதந்திர தினத்தின்போது பிரதமர் ஆற்றிய உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புகளை நாம் அனைவரும் கட்டாயம் வரவேற்க வேண்டும். சிறிய குடும்பம் என்பது தேசப்பற்று கடமை; பொருளாதாரத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும்; ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கைவிட வேண்டும் என கூறி உள்ளார்.
மேலும், முதல் மற்றும் மூன்றாவது அறிவுறுத்தல்கள், ஒரு இயக்கமாக மாற வேண்டும். பிரதமரின் இரண்டாவது அறிவுரையை நிதி மந்திரியும், அவரது அதிகாரிகளும், புலன்விசாரணை அதிகாரிகளும் நன்றாக கேட்டார்கள் என நான் நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.