மும்பை,
மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு நள்ளிரவு 1.35 மணியளவில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் புறப்படுவதாக இருந்தது.
விமானத்தில் பயணம் செய்ய 200 பயணிகள் தயாராக இருந்த நிலையில், விமானி இல்லாததால், விமானம் புறப்படுவது ஒருமணி தாமதம் ஆனது. ஆனால், தொடர்ந்து விமானிகள் இல்லாத காரணத்தால், விமானம் மணிக்கணக்கில் தாமதம் ஆனது. இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் பிற விமானங்களுக்கான சேவையை தொடர்ந்து கொண்டிருந்த விமான பணியாளர்களை தடுத்த நிறுத்த முற்பட்டனர். இதனால், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் எப்போது புறப்படும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படாததால், பயணிகள் இரவு முழுவதும் விமான புறப்பாடு முனையத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர், ஏறக்குறைய 8 மணி நேரம் தாமதமாக காலை 8.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமான பணி நேர கட்டுப்பாடு (FDTL) காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.