தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் மக்கள்... தலீபான்கள் அடிக்கின்றனர்; தப்பி வந்த நபர் பரபரப்பு பேட்டி

ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலை அதிக ஆபத்தில் உள்ளது என்றும் தலீபான்கள் அவர்களை அடிக்கின்றனர் என்றும் தப்பி வந்த நபர் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

இதனை முன்னிட்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்டு 14ந்தேதி முதல் இதுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க அரசு மீட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய விமான படையை சேர்ந்த சி-17 ரக விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட 168 பயணிகளை ஏற்றி கொண்டு இன்று காலை காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் வந்து இறங்கியது. விமான பயணிகளை, கொரோனா பாதிப்புக்கான ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி டெல்லி வந்த தீபன் ஷெர்பா என்பவர் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலை அதிக ஆபத்தில் உள்ளது. அவர்களை சுற்றி துப்பாக்கி சூடும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

தலீபான் பயங்கரவாதிகளை நம்ப முடியாது. அவர்கள் மக்களை அடிக்கின்றனர். அதனால், ஆப்கானிஸ்தானில் நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தோம் என்று கூறியுள்ளார்.