தேசிய செய்திகள்

யாஷ் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி நாளை ஒடிசா, மே.வங்கம் பயணம்

யாஷ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை ஒடிசா மற்றும் மேற்குவங்காளம் செல்கிறார்.

புதுடெல்லி,

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது.

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மீட்புக் குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையில், யாஷ் புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ளார். இந்த பணத்தின் போது இரு மாநிலங்களும் யாஷ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிடுகிறார். இந்த ஆய்வுக்கு பின்னர் புயல் பாதிப்பு நிவாரண உதவிகளை பிரதமர் மோடி அறிவிப்பால் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT