அமராவதி,
மராட்டிய மாநிலம் அமராவதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் காரணமாக காங்கிரஸ் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள், அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் கைது செய்தது. மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரேந்திர ஜாக்தாப் மற்றும் யாஷ்மோமாதி தாகூர், மண்ணெண்ணையை ஊற்றி, தீ வைப்பதற்கு முன்னதாக போலீஸ் தடுத்தது. துவரை மற்றும் கொண்டை கடலையை விவசாய விளைப்பொருள் மார்க்கெட் குழு கொள்முதல் செய்வதை தொடங்க, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவசாயிகளின் விளைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்து உள்ளார்கள். ஏற்கனவே அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்து இருந்தார்கள். இதனையடுத்து மாறுவேடத்தில் அங்கு இருந்த போலீசார் காவலில் இருந்தார்கள். அவர்கள் இன்று தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். விவசாயிகள் விவகாரத்தில் மாநில பா.ஜனதா அரசு உணர்வற்று உள்ளது எனவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டிஉள்ளார்கள்.
பருவமழை வரவுள்ள நிலையில் அரசு, ஆன்லைனில் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து 25 முதல் 30 சதவிதம் வரையிலான விளைபொருட்களை மட்டுமே வாங்கி உள்ளது, இப்போது துவரை மற்றும் கொண்டை கடலையின் விலை குறைந்துவிட்டது, என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.