கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

"நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்கக் கூடாது" - சபாநாயகர் ஓம் பிர்லா

பல்வேறு கருத்துக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

கோட்டா,

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் அனல் பறந்தன. இந்தநிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டவுக்கு சென்றார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. சிறைக்கைதிகளாக இருக்கும் அம்ரித்பால் சிங், ரஷீத் ஆகியோர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவர்கள் கோர்ட்டு வழிகாட்டுதல்படி பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பது, மக்களில் குரலை பிரதிபலிக்க கிடைத்த வாய்ப்பு. பல்வேறு கருத்துக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துக்களையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். நாட்டை வழிநடத்தி செல்ல ஆக்கப்பூர்வ கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. நாடாளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.

SCROLL FOR NEXT