புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்ட அமர்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அவருடைய உரையின் நகல்கள் அவை உறுப்பினர்களுக்கு இன்று வழங்கப்பட்டன. இந்த உரை பற்றி குறிப்பிட்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பரந்த நோக்குடன், முன்னோக்கிய பார்வையையும், தொலைநோக்கு பார்வையையும் கொண்டது ஜனாதிபதியின் உரை என கூறினார்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான பயணம் பற்றி இந்த உரை தெளிவாக வரையறுத்து உள்ளது என தெரிவித்த அவர், வருங்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய வழிகாட்டுதலையும் எடுத்து காட்டியுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த உரையானது, தேச வளர்ச்சிக்கான முழு தொகுப்பையும் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய கூடிய வகையிலான, மக்களை மையப்படுத்திய வளர்ச்சி ஆகியவற்றிற்கான வலுவான, உள்ளார்ந்த ஈடுபாட்டை அது பிரதிபலிக்கிறது. ஒரு வலிமையான, சுய சார்புடைய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாரதம் என்ற கூட்டு நோக்கத்தினையும் அது உள்ளடக்கி உள்ளது என கூறியுள்ளார்.
ஜனாதிபதி தன்னுடைய உரையில், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தீர்மானத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், உள்நாட்டு பொருட்களை வாங்க மற்றும் தேச பாதுகாப்புக்காக பிரசாரம் செய்யும்படியும் கேட்டு கொண்டதுடன், இவற்றையே அனைத்து வேற்றுமைகளையும் கடந்த விசயங்களாக நாம் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.