புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் நடக்கிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ந் தேதியும், 27-ந்தேதியும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்தக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரக் ஓ பிரையன் எம்.பி., தேர்தல் கமிஷனுக்கு ஒரு புகார் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர், பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணத்தில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் 27-ந் தேதியன்று அவரது நிகழ்ச்சிகளில் எங்களுக்கு கடும் ஆட்சேபம் இருக்கிறது. இது, வங்காளதேசத்தின் சுதந்திர பொன்விழா கொண்டாட்டத்துக்கோ, வங்கபந்துவின் நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கோ தொடர்பில்லாதவை.
அவை, தற்போது நடந்து வருகிற மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் ஓட்டு போடும் முறையில் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் இருந்தன. இதில் தேர்தல் கமிஷன் அவருக்கு கண்டனம் விடுக்க வேண்டும். அத்துடன் தண்டனை நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அப்போதுதான் எதில்காலத்தில் அவர் இதுபோன்ற தவறான செயல்களை செய்ய துணிய மாட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.