புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93-வது பிறந்த நாள் இன்று கெண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாஜ் தீவிர அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ளார். வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தில், நேசத்திற்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தனித்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமை உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச்செய்தது. வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வாஜ்பாயின் பிறந்த நாளை நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர். டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள வாஜ்பாய் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, வாஜ்பாய்க்கு நேரில் பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விஜய் கோயல் போன்ற பாஜக மேல் மட்ட தலைவர்களும் வாஜ்பாய்க்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.