புதுடெல்லி,
நாடாளுமன்ற அவையில் இன்று ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்துஎன்று கூறினார்,
ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயல்படும்போது தான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேறவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, ரயில்வே முதலீட்டை கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியில் இருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.2.15 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது என்று கூறினார்.
மேலும் பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்து காரணமாக பயணிகள் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் ரயில் விபத்து காரணமாக கடைசி உயிரிழப்பு 2019 மார்ச் மாதம் நடந்தது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.