புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் ஒரு பிரச்சினையை எழுப்பினார். அவர் கூறும்போது, இஸ்ரேல் நாட்டு நிறுவனம் ஒன்று தனது மது பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு, நமது தேசப்பிதாவை இழிவுபடுத்தியுள்ளது. அந்த நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மது பாட்டில்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவரை தொடர்ந்து பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்று கூறியதுடன், அவையில் இருந்த வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரிடம் இந்த பிரச்சினையை கவனத்தில் கொள்வதுடன், உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.