திருவனந்தபுரம்,
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் பிற அமைப்புகள் முயற்சி செய்கின்றன. மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91.71% பேர் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள்தான். இதில், மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர், வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர். மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டத்தின் போது பொது சொத்துகளைப் பாதுகாக்கவும், தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அவசரச் சட்டம் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.