தேசிய செய்திகள்

ரஷிய வெளியுறவு மந்திரி மே 14-ல் இந்தியா வருகை

பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை, லவ்ரவ் சந்தித்து பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

புதுடெல்லி

நடப்பு ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 2006-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்காவுடன் வேறு சில நாடுகளும் உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளன.

இந்நிலையில், வருகிற மே 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் பிரிக்ஸ் நாடுகளின் மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரவ் மே 14-ல் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இதனை அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை மந்திரி ஆண்ட்ரே ருடென்கோ இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை, லவ்ரவ் சந்தித்து பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

சமீபத்தில், 2-வது சர்வதேச மாநாடு நடந்தபோது, அதில் வீடியோ கான்பெரன்ஸ் வழியே பேசிய லவ்ரவ், நடப்பு ஆண்டில் ரஷியாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறினார். சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்பு ஆகியவற்றுடன் இரு தரப்பினரின் நலன்களுக்கு பரஸ்பரம் முக்கியத்துவம் கொடுத்து, இரு நாடுகளின் உறவுகள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ரஷிய-இந்திய உறவு உள்ளது என அப்போது அவர் குறிப்பிட்டார்.