புதுடெல்லி,
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக ரூ.3,600 கோடியில் அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது.
இந்த ஊழலில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத்தின் நெருங்கிய உறவினரான ராதுல் புரி மீதும் புகார் எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
இந்தநிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி இந்தர்ஜித் சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது நெருங்கிய உறவினர் முதல்-மந்திரியாக இருப்பதாகவும், சமீபத்தில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள். காங்கிரசில் சேர்ந்த நிலையில் தன்னை திடீரென மத்திய அமலாக்கப்பிரிவு கைது செய்ய நினைப்பதாகவும் கூறி முன் ஜாமீன் கேட்டார்.
அதைத் தொடர்ந்து அவரை மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் 29-ந் தேதி (நாளை) வரை கைது செய்வதில் இருந்து தடை விதித்து நீதிபதி இந்தர்ஜித் சிங் உத்தரவிட்டார்.