தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்; அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் மற்றும் நிதின் நபின் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கலின்போது, துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பாட்னா

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், பா.ஜ.க. தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட நபின், சட்டசபையின் மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) பதவி வகித்தவர். முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். இந்த வேட்புமனு தாக்கலின்போது, துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பா.ஜ.க.விற்கு முதல்-மந்திரி பதவியை வழங்குவதற்காக நிதிஷ்குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்-மந்திரியாவார் என்றும் கூறப்படுகிறது.

10 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்ட நிதிஷ்குமார், எம்.பி. ஆவதற்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பீகார் சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒட்டு மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 202 என்ற அளவில் உள்ளது. இதனால், குறைந்தது 4 முதல் அதிக அளவாக 5 எம்.பி.க்கள் வரை இந்த கூட்டணியில் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.