தேசிய செய்திகள்

ஜனாதிபதி நிகழ்ச்சி பற்றி மாநில அரசுக்கு எதுவுமே தெரியாது; புள்ளி விவரத்துடன் பதிலளித்த மம்தா பானர்ஜி

ஜனாதிபதி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரே இதற்கு பொறுப்பு என பதிலாக கூறினார்.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் பழங்குடியினர் தொடர்பான சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். எனினும், அவரை வரவேற்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அவருடைய அரசிலுள்ள வேறு மந்திரிகளும் கூட ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேரில் செல்லவில்லை. இதேபோன்று மாநாடு முதலில் நடைபெற இருந்த பிதான் நகர் பகுதிக்கு பதிலாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டது. கொசாய்பூருக்கு மாநாடு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக விசயங்களை செய்துள்ளது. ஆனால், இந்த பகுதியில் வளர்ச்சி உங்களை வந்தடைந்ததா? அதுபோன்று எதுவும் எனக்கு தெரியவில்லை என்றார்.

இந்த மாநாட்டுக்கு வரவே சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர் என நான் நினைக்கிறேன். சந்தல் பழங்குடியினர் ஒற்றுமையாக இருக்க சிலர் விரும்பவில்லை போலும் என பேசினார். இதன்பின்னர் அவர், மாநாட்டுக்கான இடம் ஏன் மாற்றப்பட்டது? என எனக்கு தெரியவில்லை. நானும் வங்காள பெண்தான். மம்தா என்னுடைய இளைய சகோதரி போன்றவர்.

ஆனால், அவர் ஏன் மனவருத்தத்தில் இருக்கிறார் என தெரியவில்லை என பேசினார். முர்முவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் மம்தா நடந்து கொண்டார் என நேரிடையாக குறிப்பிடாமல் முர்மு வேதனை வெளியிட்டார்.

இதனை குறிப்பிட்டும், முர்முவின் சில வீடியோக்களை வெளியிட்டும் பேசிய பிரதமர் மோடி, இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என்றும் கூறி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த மந்திரிகள் மற்றும் பல்வேறு உறுப்பினர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று, முர்முவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லை என்றும் சாலையில் குப்பைகள் வீசப்பட்டு கிடந்தன என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நிகழ்ச்சி பற்றி மாநில அரசுக்கு எதுவுமே தெரியாது என புள்ளி விவரத்துடன் மம்தா பானர்ஜி பதிலளித்து உள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நிகழ்ச்சியில் நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும், ஜனாதிபதி நிகழ்ச்சியின் விவரங்கள் பற்றி கூட எந்த விசயமும் மாநில அரசுக்கு தெரியாது என கூறியதுடன், குப்பைகளை அகற்ற வேண்டியதற்கும், மகளிர் கழிவறையில் தண்ணீர் இல்லாததற்கும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஜனாதிபதிக்கு அந்த இடம் வழங்கிய இந்திய விமான கழகமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரே இதற்கு பொறுப்பு என பதிலாக கூறினார்.

அந்த இடம் நாங்கள் தேர்வு செய்தது அல்ல. நீங்களே அதனை தேர்வு செய்தவர்கள் என கூறியுள்ளார். நாங்கள், ஜனாதிபதி மீதும், அரசியலமைப்பின் மீதும் முழு அளவில் மதிப்பு வைத்திருப்பதுடன், அரசியலமைப்பை தாயாக கருதுகிறோம். எங்கள் மீது அவதூறு சுமத்த வேண்டாம் என்றார்.

இதேபோன்று, எஸ்.ஐ.ஆர். பணியின்போது வாக்காளர்கள் நீக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறி மேற்கு வங்காளத்தில், மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு பேசினார்.

அவர் பேசும்போது, பழங்குடியினருக்கு எதிராக வன்முறைகள் நடந்தபோது நீங்கள் ஏன் போராடவில்லை? பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் அல்லது சத்தீஷ்காரில் அது நடந்தபோது ஏன் நீங்கள் போராடவில்லை? முதலில் அவர்களுக்கு ஏதேனும் சில விசயங்களை செய்யுங்கள். அதன்பின்பு ஏதேனும் பேசுங்கள். பா.ஜ.க. அறிவுரையை கேட்டு தேர்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம் என்றும் கூறினார்.