புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டம் லகிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி விசாரித்த ஐகோர்ட்டு ஆஷ்ஷி மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த ஒரு விவசாயி-யின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 18-ம் தேதி (இன்று) அறிவிப்பதாக கூறு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது. அதில், லகிம்பூர் வன்முறையில் குற்றவாளியான மத்திய இணைமந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ரா ஒருவாரத்திற்குள் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து லகிம்பூர் கேரி வன்முறை வழக்கில் ஜாமீனில் உள்ள ஆஷிஷ் மிஸ்ரா விரைவில் போலீஸ் நிலையத்தில் சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.