புதுடெல்லி,
டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
டெல்லியில் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு முக்கிய பகுதியான சப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 12 முதல் 13 டிகிரிவரை வெப்பநிலை இருந்தது. இதே பகல் நேரத்தில் நேற்று சென்னையின் வெப்பநிலை 28 டிகிரியாகவும், ஊட்டியின் வெப்பநிலை 17 டிகிரியாகவும் இருந்தது.
கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் நாள் முழுவதும் சூரியனையே பார்க்க முடியாத நிலை உள்ளது. சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்கள் தெரிவதில்லை. இதனால் ரெயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கடும் குளிர், வரும் 4 நாட்கள் மேல் நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்து உள்ளது. மேலும், வருகிற 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மட்டுமின்றி அருகில் பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் இந்த பாதிப்பு இருக்கும்.
இதற்கிடையே, தற்போது டெல்லியில் காற்றின் தரம் நல்ல நிலையில் இல்லை. நேற்று காலை காற்றின் தரக் குறியீடு 364 ஆக இருந்தது. மழை பெய்தால் காற்று மாசு குறையும் என்பதால் மழை பெய்யட்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.