சபரிமலை,
கேரள கோவில்களில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசியின்றி வாழவும் வேண்டி விளைந்த நெற்கதிர்களை வைத்து பூஜை நடத்தி அந்த நெற்கதிர்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதே நிறைபுத்தரிசி பூஜையாகும்.
இந்தநிலையில் நேற்று கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. சபரிமலையில் பலத்த மழை மற்றும் பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று காலை சபரிமலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை மிக எளிமையாக நடந்தது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஒரு சில அதிகாரிகள் மற்றும் கீழ் சாந்திகள் மட்டுமே கலந்துகொண்டனர். சபரிமலையில், முதல் முறையாக பக்தர்கள் இன்றி நிறைபுத்தரிசி பூஜை மிக எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.