புதுடெல்லி,
இந்தியாவில் தொலைக் காட்சி சேனல்கள் 65 சதவீதம் கேபிள் இணைப்புகள் மூலமாகவும், 35 சதவீதம் டி.டி.எச். இணைப்பு மூலமாகவும் வழங்கப்படுகின்றன. நுகர்வோர் தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2017-ம் ஆண்டு ஒரு புதிய ஒழுங்குமுறை திட்டத்தை அறிவித்தது.
அதன்படி மக்கள் தாங்கள் பார்க்க விரும்பும் கட்டண சேனல்களை மட்டும் தேர்வு செய்து கேபிள் நிறுவனங்கள் அல்லது டி.டி.எச். நிறுவனங்களுக்கு அறிவிக்க வேண்டும். இதனால் மக்கள் செலுத்த வேண்டிய கட்டணம் கணிசமாக குறையும் என்று அறிவித்தது.
மக்கள் தாங்கள் விரும்பும் கட்டண சேனல்களை தேர்ந்தெடுத்து தகவல் தெரிவிக்க கடந்த ஜனவரி 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி பலர் தேர்ந்தெடுத்து அறிவித்தாலும், இன்னும் ஏராளமானோர் சேனல்களை தேர்ந்தெடுக்காமல் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து டிராய் கடந்த திங்கட்கிழமை கேபிள் மற்றும் டி.டி.எச். ஆபரேட்டர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது. அப்போது அந்நிறுவனங்கள் சந்தாதாரர்கள் விரும்பும் சேனல்களுக்கு மாற்றும் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. இன்னும் பலர் சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி டிராய் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நுகர்வோர் தாங்கள் பார்க்க விரும்பும் கட்டண சேனல்களை தேர்ந்தெடுக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. சேனல்களை வழங்கும் நிறுவனங்கள் நுகர்வோர் விரும்பும் சேனல்களை தெரிவித்த 72 மணி நேரத்தில் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதுவரை பழைய முறைப்படியே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.