மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வரும் செப்டம்பர்- அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று சிவசேனா துடிப்புடன் உள்ளது.
இளைய தலைமுறையினரின் ஓட்டுகளை அள்ளுவதற்கு வசதியாக அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே ஜன ஆசீர்வாத யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.
அடுத்த கட்டமாக பெண்கள் ஓட்டுகளை கவர்வதற்கு வசதியாக மவ்லி சன்வாத் என்ற பெயரில் பிரசார இயக்கம் ஒன்றை சிவசேனா கட்சி தொடங்கி உள்ளது.
இந்த பிரசார இயக்கத்தை நடத்துகிற பொறுப்பு புகழ்பெற்ற மராத்தி நடிகரும், சிவசேனா கட்சி செயலாளருமான ஆதேஷ் பாண்டேகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் அங்குள்ள டி.வி. சேனல் ஒன்றில் ஹோம் மினிஸ்டர் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த செல்வாக்கை பயன்படுத்தி பெண்களை கவர்ந்து ஓட்டுகளை அள்ள வேண்டும் என்பதுதான் சிவசேனாவின் திட்டம். இந்த பிரசார இயக்கத்தை ஆதேஷ் கடந்த வெள்ளிக்கிழமை பால்கார் மாவட்டத்தில் தொடங்கி நடத்தி வருகிறார்.