தேசிய செய்திகள்

வர்த்தக ஒப்பந்தத்தால் வேலை வாய்ப்புகள் பெருகும்: டிரம்புக்கு நன்றி- பிரதமர் மோடி

இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா- அமெரிக்கா இடயேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியாகியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: - இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுகளுக்கு தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கட்டமைப்பு, இந்தியா – அமெரிக்கா கூட்டுறவின் ஆழமான நம்பிக்கை மற்றும் இயக்கத்தன்மை தொடர்ந்து வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ முயற்சியை மேலும் வலுப்படுத்தும் இந்த ஒப்பந்தம், இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், நம்பகமான மற்றும் தாங்கும்திறன் கொண்ட வினியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த கட்டமைப்பு பங்களிக்கும். ‘வளர்ந்த பாரதம்’ நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தை நோக்கிய, மக்களை வலுப்படுத்தும் மற்றும் பகிர்ந்த வளமையை உருவாக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.