தேசிய செய்திகள்

குழந்தை திருமணம், சதி நடைமுறை போல் முத்தலாக்கும் ஒழிக்கப்பட வேண்டிய தவறான நடைமுறையே; மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி

குழந்தை திருமணம், சதி நடைமுறை போன்று முத்தலாக்கும் ஒழிக்கப்பட வேண்டிய தவறான நடைமுறையே என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தது. மோடி 2வது முறையாக பிரதமரானார். இந்நிலையில், மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சில நேரங்களில் ராணுவ படைப்பிரிவை புண்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்கள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான சட்டங்களை உருவாக்குவதற்கான பாதைகளுக்கு தடை ஏற்படுத்துகின்றனர்.

முத்தலாக்கிற்கு மதத்துடன் எந்தவித தொடர்புமில்லை. அது தவறான மரபுகள் மற்றும் தவறான பழக்கங்களின் தொடர்ச்சி ஆகும். நாட்டில் தவறான மரபுகள் மற்றும் வழக்கங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலில் குழந்தை திருமணம், சதி நடைமுறை மற்றும் அதுபோன்ற பிற விசயங்கள் ஒழிக்கப்பட்டன. அதனால் இதனை ஏன் கொண்டு வர கூடாது. இந்த மசோதா (முத்தலாக்) இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.