ஜபல்பூர்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிஷாப் ஜெயின் (வயது 25). இவர் உள்ளூர் விஸ்வ இந்து பரிஷத் தலைவராக இருந்தார். பளிங்கு கற்சிலைகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீடு சென்று சேரவில்லை. இதைத்தொடர்ந்து மறுநாள் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் அன்று மாலை ஜெயின் மோட்டார் சைக்கிள் ஸ்வர்ந்த்வாரி பகுதியில் ஒரு போடப்படாத பாதையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து சில அடி தூரத்துக்கு ரத்தம் சிந்திய தடயம் இருந்தது. அந்த இடத்தில் மண்ணில் முடிவு பெற்றது என எழுதப்பட்டு இருந்தது. போலீசார் அங்கு மண்ணை தோண்டியபோது ஒன்றரை அடி ஆழத்தில் ஜெயின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. அவரது தலை, மூக்கு ஆகிய இடங்களில் ரத்தக்காயம் இருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.