தேசிய செய்திகள்

கணவனின் சந்தேக புத்தியால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

என் நடத்தையில் சந்தேகம் இருந்தால் என் மகனது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று இளம்பெண் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டம் கொள்ளகூடம் கிராமத்தை சேர்ந்தவர் மேகல மகேஷ். ரெயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வளிகொண்டா மண்டலம் வேமுலகொண்டா கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (28 வயது) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜான்சி (2 வயது) பண்டு (பத்து மாதம்) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ், தன் மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் சகோதரர்கள் மைத்துனர் மீது புகார் செய்துவிட்டு 2 மாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யாவையும், அவரது மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அப்போது முதல் ஐஸ்வர்யா பெற்றோருடனேயே இருந்து வந்தார். அதன்பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தபோதுகூட, மகேஷ் ஒரு முறை கூட சென்று பார்க்கவில்லை.

மகேஷ் தான் வேலை பார்க்கும் ஷங்கர் பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் உறவினர்கள் சேர்ந்து ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளகூடத்தில் உள்ள கணவரின் வீட்டில் பேசி விட்டுவிட்டு சென்றனர். ஆனால் அங்கு கணவர் இல்லை. மாமனார் மாமியார்தான் இருந்துள்ளனர். அன்று இரவு அனைவரும் தூங்க சென்றனர்.

மறுநாள் காலையில் அவரது மாமியார் சத்தம்மா, மருமகளின் அறை கதவை திறந்து பார்த்தபொழுது ஐஸ்வர்யா புடவையால் தூக்குமாட்டிக் கொண்டு மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தார். இரண்டு குழந்தைகளும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.

உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த அறையில் ஐஸ்வர்யா எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் "மாமியார் வீட்டில் கொடுமை தாங்க முடியாமல் தான் என் பிள்ளைகளை கொன்று நானும் தற்கொலை செய்து கொண்டேன். என் மரணத்திற்கு எனது கணவர் மகேஷ், மாமியார் சத்தம்மா, மாமனார் நரசிம்மா, மற்றும் மைத்துனிகள் தான் காரணம். என் நடத்தையில் சந்தேகம் இருந்தால் என் மகனது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று எழுதி உள்ளார்.

இந்த முடிவெடுத்ததற்காக மன்னிப்பு தெரிவித்து தந்தைக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "அப்பா மீண்டும் ஒரு ஜென்மம் என்று இருந்தால் உனக்கு மகனாக பிறக்கிறேன். பெண்ணாக பிறப்பதும் வாழ்வதும் இந்த உலகில் அசாத்தியம். என் மாமியார் வீட்டினர் நீங்கள் எனக்கு கொடுத்த 32 லட்சம் வரதட்சணை, 30 சவரன் தங்கத்தை மட்டும் தான் பார்த்தார்கள். அதற்காகத்தான் என்னை திருமணம் செய்து கொண்டார்கள்" என்று எழுதியிருந்தார். இரண்டு கடிதங்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.