ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி(வயது 33). விவசாயியான இவரது மனைவி மஞ்சுளா(31). இவர்களுக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மஞ்சுளா ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கல்லூரிக்கு செல்வதற்காக தண்டலையிலிருந்து புறப்பட்டு தனது மொபட்டில் நேற்று காலை 10 மணி அளவில் கல்லாத்தூர் அருகே ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். ஆயாக்குளம் ஏரி அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே கும்பகோணத்தில் இருந்து வரதராஜன்பேட்டை நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான தஞ்சை மாவட்டம், மாதாகோட்டை மைக்கேல் நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பெலிக்ஸ்கியோடர்(30) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மஞ்சுளா விபத்தில் பலியானதை அறிந்த அவரது உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது அவர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க செய்தது. தற்போது அந்த 8 மாத பெண் குழந்தை, தாய் இறந்தது தெரியாமல் தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.