மண்டியா,
மண்டியா டவுன் அருகே பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் காலமுட்டனதொட்டி பகுதியில் நேற்று இரவு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தாறுமாக ஓடி சாலையோரம் நடந்து சென்றவர்கள், அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் மற்றும் சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் ஆகியவை மீது மோதியது.
சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து மண்டியா மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் காங்கிர பிரமுகரான ரபி, வினய், ஜானகியம்மா என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மற்றொரு நபரின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து மண்டியா மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.