புதுடெல்லி,
டெல்லியில் குடிநீரின் தரம் மோசமாக இருப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய தரநிர்ணய அமைப்பின் (பி.ஐ.எஸ்) சார்பில் ஆஜரான வக்கீல் விபின் நாயர் வாதாடுகையில், டெல்லியில் ஜன்பத் பகுதியில் உள்ள மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இல்லம் மற்றும் புராரி, அசோக் நகர், பாபா காலனி, சூரத் விகார், அசோக் நகர் உள்ளிட்ட 11 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த குடிநீர் மாதிரிகள் இந்திய தர நிர்ணய அமைப்பு வகுத்துள்ள 47 விதமான தரநிர்ணய விதிமுறைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்றும் கூறினார். அதாவது விதிமுறைகளின் படி குடிநீர் தரமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தர நிர்ணய அமைப்பு, டெல்லி குடிநீர் வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கூட்டாக ஆய்வு செய்து, டெல்லியில் குடிநீரின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.