தமிழகத்தில் குடியிருப்புகளும், தொழில்நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகளும் அதே வேகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் செங்கற்கள், செங்கல் சூளைகள் அமைத்து தமிழகத்தில் பரவலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் மழைக்காலத்தில் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதால், கட்டுமான பணிகள் தேக்கமடைகின்றன. அதே வேளையில் செங்கலுக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் பிளை ஆஷ் செங்கல் எல்லா காலங்களிலும் கிடைப்பதால், இதற்கு கட்டுமானத் துறையினரிடம் வரவேற்பு காணப்படுகிறது.
நிலக்கரி சாம்பல், மணல், ஜிப்சம், சுண்ணாம்பு சேர்ந்த கலவை மூலமே இவ்வகை கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் கலவையை மிக்சர் எந்திரத்தில் கொட்டிய பின், கன்வேயர் பெல்ட் வழியாக எந்திரத்திற்கு அனுப்பப்பட்டுப் பிளை ஆஷ் கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முறையில் சிறிய எந்திரம் மூலம் தினமும் 20 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்ய முடியும். இதுவே பெரிய எந்திரம் என்றால் 30 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்யலாம். இந்தச் செங்கலுக்கும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள செங்கற் களுக்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஒரு பிளை ஆஷ் செங்கல் ரூ.5.50 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப் படுகிறது.
செங்கலை காட்டிலும் பிளை ஆஷ் பிரிக்ஸ் மிகவும் உறுதியாக உள்ளதாக கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர். செங்கலில் வீடு கட்டுவதற்கும், இந்த கல்லுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பொறியாளர்கள் பெரும்பாலும் கட்டுமானத்திற்கு சாம்பலில் தயாராகும் செங்கலையே பரிந்துரை செய்கின்றனர். இந்த வகை செங்கற்கள் சரியான அளவில் இருப்பதால் சிமெண்டு கலவை குறைவாகிறது.
மழை, வெயில் என எந்தக் காலத்திலும் உற்பத்தியாகி தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும், விலை ஏற்ற இறக்கமின்றி உள்ளதாலும் கட்டுமானங்களுக்கு இதனை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.