சென்ற ஆண்டு நவம்பரில் பிரேசிலில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 2020 ஜனவரி 26-ல் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வரும்படி பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோவுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரிக்ஸ் (பி.ஆர்.ஐ.சி.எஸ்) என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த பொருளாதாரங்கள் அளவை பற்றி கோல்ட்மென் சாக்ஸ் என்ற பொருளியலாளர்(தென்ஆப்பிரிக்கா நீங்கலாக)2003-ல் உருவாக்கிய சுருக்கப் பெயராகும். டைம் பத்திரிகை உருவாக்கியுள்ள, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி போல்சனரேவை, ஏப்ரல் 2019-ல் சேர்த்தது.
இந்த அழைப்பு, உலகில் பெரும் பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதன் மூலம் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக வளர்த்தெடுக்க உறுதி பூண்டிருக்கும் இந்திய பிரதமர் அளித்துள்ள சமிக்ஞை என்று கருதப்படுகிறது. சீனாவுடனான சமீபத்திய உறவு மேம்பாட்டு நடவடிக்கைகளும் இதை காட்டுகிறது.
இந்தியா, பிரேசில் இடையே தூதரக உறவுகள் 1948-ல் ஏற்படுத்தப்பட்டது. ரியோ டி ஜெனிரோ வில் இந்திய தூதரகம் 1948-ல் திறக்கப்பட்டு, 1971-ல் பிரேசில்லாவிற்கு மாற்றப்பட்டது. ஜனாதிபதி போல்சனரே, இந்தியாவிற்கு வருகை தரும் நான்காவது பிரேசில் ஜனாதிபதி ஆவார். இவருக்கு முன்பு ஜனாதிபதி தில்மா ரூசெப் (மார்ச் 2012), ஜனாதிபதி லூலா (2004, 2007 மற்றும் 2008) மற்றும் ஜனாதிபதி ஹென்றி கார்டொசோ (1996) ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
இந்திய தரப்பில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2014-லும், பிரதமர் மன்மோகன் சிங் 2006-லும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் 1998-லும், பிரதமர் நரசிம்ம ராவ் 1999-லும், பிரதமர் இந்திரா காந்தி 1968-லும், துணை ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் 1954-லும் பிரேசில் சென்றுள்ளனர். 1950 முதல், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, ஏதாவது ஒரு உலக நாட்டின் அதிபர் அல்லது பிரதமரை இந்தியா அழைக்கிறது. 1955-ல், இன்றும் உள்ள வடிவில், புது டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணி வகிப்பு உருவாக்கப்பட்டது.