ஞாயிறுமலர்

எதிர்மறை எண்ணங்களை விரட்டும் யுக்திகள்

மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் மனதோடு தான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ, நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி அசை போட்டபடியோ பொழுதை கழிப்பார்கள். இதே மனநிலை நீடித்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்துவிடும். ஏதாவது ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும்.

எதிர்மறை எண்ணங்களை கையாள்வதற்கு முன், அவற்றை அடையாளம் காண்பது முக்கியம். எந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் அடிக்கடி எழுகிறது? அதற்கான காரணம் என்ன? அதனை செயல்படுத்துவது சாத்தியமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும். மனதுக்குள்ளேயே சுய விமர்சனம் செய்து தேவையற்ற எண்ணங்கள் எழுவதை தடுக்க வேண்டும். அதையும் மீறி எழும் எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதற்கான சில வழிமுறைகள்...

* ஒவ்வொரு நொடியும் கடக்கும்போது அந்த சமயத்தில் நடக்கும் விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதனை பயிற்சியாக மேற்கொண்டு வரலாம். நாளடைவில் கடந்த கால நினைவுகளோ, தேவையற்ற சிந்தனைகளோ மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கும் அனுமதிக்காது.

* அறிவாற்றல், நடத்தையை மேம்படுத்தும் தெரபி சிகிச்சைகளையும் பெறலாம். இவை எதிர்மறையான சிந்தனைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நேர்மறையானதாக மாற்றவும் உதவும்.

* எதிர்மறை சிந்தனைகள் எழும்போதெல்லாம் கவனத்தை திசை திருப்ப, மனதுக்கு பிடித்தமான விஷயங்களை நோட்டில் எழுதலாம்.

* உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை மட்டுமல்ல மன நலத்தையும் பேண உதவும். உடற்பயிற்சி செய்யும்போது வெளியிடப்படும் எண்டோர்பின் ஹார்மோன் இயற்கையாகவே மனநிலையை அதிகரிக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும்.

* எதிர்மறை எண்ணங்களைப் பற்றி உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மனம் விட்டு பேசுவது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மனதுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

* செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் எதிர்மறையான செய்திகளை படிப்பதை தவிருங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தூண்டக்கூடிய சூழல் நிலவினால் அங்கிருந்து விலகி இருங்கள்.

* போதுமான தூக்கம், சரியான வேளையில் சாப்பிடுதல், விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* வாழ்க்கையில் இலக்குகள் இருப்பது அவசியம். ஆனால் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அவை உருவாக்கினால் எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும். எனவே, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க, அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும். அதனை நோக்கி பயணிக்கவும்.

* எதிர்மறையான சிந்தனையோ, பேச்சுக்களோ வெளிப்படும்போது நேர்மறை எண்ணங்களை தூண்டும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் வார்த்தைகள், நேர்மறையான விஷயங்களை சுட்டிக்காட்டும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் போன்றவற்றை படிக்கலாம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்