விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு சாவடி தீர்த்தவாரி வீதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது முதல் மனைவி கவிதா இறந்துவிட்டார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஜெயந்தி என்பவரை அய்யனார் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹர்ஷினி (11 வயது), கயல் (8 வயது) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
கடந்த 14-ந்தேதி கீழ்புத்துப்பட்டு சாவடி இ.சி.ஆர். சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்ற ஹர்ஷினி மற்றும் கயல் இருவரும் அங்குள்ள குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். கோவில் திருவிழாவின்போது 2 சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே 2 மகள்களை பறிகொடுத்த தாய் ஜெயந்தி, அவர்களின் நினைவாகவே இருந்து வந்துள்ளார். தினந்தோறும் அழுதபடி துயரத்தில் இருந்த அவரை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். இருப்பினும் மகள்களின் நினைவு அவரை வேதனைக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் அய்யனார், நேற்று காலையில் வயலுக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யனார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டபோது, அவர் இறந்த விட்டதாக தெரிந்தது.
இதுபற்றி அறிந்த கோட்டக்குப்பம் போலீசார், விரைந்து வந்து ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 மகள்களை பறிகொடுத்த வேதனையில் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.