தமிழக செய்திகள்

செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 3 பழங்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் முனுசாமி, விழுப்புரம் செங்குட்டுவன் ஆகியோர் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தேவரடியார் தாங்கல் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாறையில் 3 கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையாருக்கு நில தானம் செய்ததை குறிப்பிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தேவரடியார் தாங்கல் ஏரி மற்றும் விளைநிலப் பகுதியில் பாறைகளில் வெட்டப்பட்டு இருந்த 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

இவற்றில் ஒரு கல்வெட்டில் செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கர் என்பவர் நிர்வாகம் செய்தபோது மங்களம் என்ற ஊரை சேர்ந்தவர்களின் வழிபாட்டில் இருந்து வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்ததை குறிப்பிடுவதாக இருப்பது கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு கி.பி. 16-17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

தேவரடியார் தாங்கல் அருகில் கொத்தமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 400 ஆண்டுகளுக்கு முன் மங்கலாபுரம் என்று அழைக்கப்பட்ட நிலையில், தற்போது கொத்தமங்கலம் என்று அழைக்கப்படுவதை அறிய முடிகிறது.

மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள மற்ற 2 கல்வெட்டுகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன. இதுவும் மேற்கண்ட காலகட்டத்தை சேர்ந்த நில தானம் குறித்த கல்வெட்டாக இருக்கலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Also read:பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்