தஞ்சை,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை வந்த பரிசோதனை முடிவில், தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 மாணவர்களுக்கும் திருவையாறில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் இதுவரை 180-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.