சென்னை,
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகி உள்ளன. 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்தார். அதன் பின்னர் மாநில தலைநகரங்களில் நடைபெற்ற விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றிவைத்தனர்.
அந்த வகையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார்.
இந்நிலையில், 75வது சுதந்திர தினத்தையொட்டி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார். தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, மற்றும் நீதிபதிகள் பங்கேற்றுள்ளனர்.