நெல்லை,
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் வாழ்வதற்காக தங்களது பண்டிகைகளையே கொண்டாடாமல் தியாக மனப்பான்மையோடு பொதுமக்கள் வாழ்ந்துவருதை பிற பகுதி மக்கள் கண்டு வியப்படைந்து வருகின்றனர்.
நெல்லை நாங்குநேரியில் உள்ள சிறு கிராமம் கூந்தன்குளம். இந்த ஊருக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இந்த கிராமத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து பலவகையான பறவை இனங்கள் கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள குளங்கள் மற்றும் தெருக்களில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன. இது காலங்காலமாக இங்கு நடந்து வருகிறது.
இதனால் எந்த ஒரு திருவிழா நடந்தாலும், பறவைகளை அச்சுறுத்தாத வகையில் மின்விளக்குகள் வைத்து மட்டும் அக்கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகையை கூந்தன்குளம் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் கொண்ட உள்ளனர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக பறவைகளை அச்சுறுத்தாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமமும் பட்டாசுகளைத் தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பட்டாசுகளின் வாடையே இல்லாமல் அங்குள்ள குழந்தைகள் வளர்த்து வருகின்றனர்.
பறவைகள் வாழ்வதற்காக தங்களது பண்டிகைகளையே கொண்டாடாமல் தியாக மனப்பான்மையோடு கூந்தன்குளம் மக்கள் வாழ்ந்துவருதை பிற பகுதி மக்கள் கண்டு வியப்படைந்து வருகின்றனர்.