அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. அவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன தேஜி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் காட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்காக நேற்று காலை சத்தியமூர்த்தி தனது மனைவி, குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மடியில் குழந்தையை வைத்தபடி பிரியா அமர்ந்திருந்தார். இந்த நிலையில் செம்புளிச்சாம்பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை சத்தியமூர்த்தி திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் குழந்தை தேஜி, தாய் பிரியாவின் மடியில் இருந்து நழுவி கீழே விழுந்தது. இதில் குழந்தை தேஜி தலையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் பிரியாவும் கீழே விழுந்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த குழந்தையை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக கார் டிரைவரான கோபி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.