கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ரஜினியை இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார் - இந்திய கம்யூ. கட்சி

ரஜினியை, ஆதவ் அர்ஜுனா ஏளனமாக பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொடுத்த மிரட்டலால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டார். இதனிடையே நேற்று மாலையில் கொளத்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.

இந்த நிலையில் ரஜினியை இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் கடந்த 12-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்பொழுது, “எம்.ஜி.ஆருக்குப் பின், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என வந்த நடிகர் ரஜினியை, அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. இப்போது ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் நடிக்க போய்விட்டார். அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும் தான் உள்ளது” என பேசியுள்ளார்.

தான் அரசியலுக்கு வருவதை கைவிடுவதற்கு தனது உடல் நலனே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்ததை மறந்து விட்டு, ரஜினியை தைரியமற்றவர் என ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். அதுமட்டுமன்றி, “ரெட் ஜெயன்ட்” தயாரிப்பில் ரஜினி நடிப்பதையும் இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். தமிழக மக்களின் பேரன்பை பெற்ற மூத்த திரைக் கலைஞர் ரஜினியை, ஆதவ் அர்ஜுனா ஏளனமாக பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also read:11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு