ராமநாதபுரம்,
இலங்கையில் நிலை கொண்டிருக்கும் டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையுடன், மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஓலைகுடா கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. ஓலைகுடா கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், சாலை சேதமடைந்ததால் அங்குள்ள மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். கொட்டும் மழைக்கு நடுவே, கடல் சீற்றத்தால் மேலும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கற்கள் மற்றும் மணலை கொட்டி சேதமடைந்த சாலையை ராணுவ வீரர்கள் சீரமைத்தனர்.