தமிழக செய்திகள்

தமிழக முதல் அமைச்சர் மீது கடும் விமர்சனங்களை தவிர்க்க ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

தமிழக முதல் அமைச்சர் குறித்த கடுமையான விமர்சனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என மு.க. ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி குறித்த கடுமையான விமர்சனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரசியல் தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு அழகல்ல. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான வார்த்தைகளை பேசுவது தாக்கத்தை உருவாக்கும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் மீது நடந்த விசாரணையில், 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த வழக்குகளில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதன்பின்னர், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என கூறிய நீதிபதி, கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கினார்.