சென்னை,
ஈரோட்டில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் தமிழக அரசு 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணைகளின் அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், நீர் நிலைகளில் சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில் பாசன பரப்பை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், திருடுவதற்கு ஏதுவாக வளமாக தண்ணீர் இருப்பதால் அதை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்ததோடு, எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில் தண்ணீரை பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.