சென்னை,
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நல அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்தவர் வளர்மதி. இவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த இடமாறுதலை ரத்து செய்யக்கோரி வளர்மதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அதிகாரி வளர்மதிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாக இணை ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். அதனடிப்படையில் இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது வளர்மதி மீது துறை ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் அருகில் உள்ள மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.