நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவருக்கு படித்து வருகின்றனர்.
இங்கு பயிலும் வடமாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி, கடந்த சில நாட்களாக தேர்வில் வெற்றி பெற முடியுமா என சந்தேகம் எழுந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி, அந்த கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஓம் பிரகாஷ் (44 வயது) என்பவர் மாணவியை தனியாக அழைத்து பேசி வந்தார்.
இதையடுத்து தேர்வு சம்பந்தமாக பேசுவதற்காக ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு மாணவியை வரவழைத்தார். அங்கு வைத்து, தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக மேலிடத்தில் பேசி விட்டேன் என்று ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, மருத்துவரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இதில் போதைப்பொருள் பயன்படுத்தி ஓம் பிரகாஷ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓம் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டியில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் சென்னையை சேர்ந்தவர். ஏற்கனவே 2 திருமணமான நிலையில் 2 மனைவிகளும் அவருடன் இல்லை என்பதும், தனிமையாக ஊட்டியில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே அவர் வேறு மாணவிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.