சென்னை,
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக வாக்காளர் பட்டியலை தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகளை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதுதொடர்பான அறிக்கையை அளிக்கவும் 9 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.