சென்னை,
2021 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக கூடும் இடங்களில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பொது இடங்களில் பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. இதனை கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சில கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். வழக்கமான கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு இல்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என அமைதியான முறையில் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.