தமிழக செய்திகள்

வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30-ந் தேதிகளில் - 2 கட்டமாக தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் சர்ச்சை எழுந்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது.

புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உள்ளாட்சி தேர்தலை அதே மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக செய்து வந்தது.

இந்த நிலையில், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி மட்டும் நேற்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 13-ந் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16-ந் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற விரும்புபவர்கள் 18-ந் தேதி அன்று பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

ஊரக பகுதிகளில் நடை பெறும் இந்த தேர்தலில் 3 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட இருக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு