வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சேம்பள்ளி, ஜிட்டப்பல்லி, உப்பரபல்லி, கொட்டாரமடுகு உள்ளிட்ட கிராம பகுதிகளில் இன்று மாலை சுமார் 4 மணி முதல் ஒன்றரை மணி நேரம் கடும் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
பலத்த மழை பெய்ததால் கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பலத்த சூறைக்காற்று இப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள், மாமரங்களை சாய்ந்தன.
மேலும் பலடன் மதிப்பிலான மாங்காய்கள் உதிர்ந்து கீழே விழுந்தது 25-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது, ஏராளமான மரங்கள் வழிநெடுகிலும் விழுந்தன கூரை வீடுகளின் கூரைகள் பலத்த சேதமடைந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழை இப்பகுதியை புரட்டிப் போட்டது.
பலத்த சூறாவளி மழையின்போது கோலிகுண்டு அளவு ஆலங்கட்டி விழுந்தது. இந்த மழையால் பல லட்ச ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சோகத்துடன் கூறினர். மேலும் இப்பகுதியில் மின்சாரம் சீராக இரண்டு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்தனர்.