மதுரை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த வருடம் அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை பரவியது. இதனை கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து ஆலையை மூட அரசாணை வெளியானது. இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் முறையீடு செய்தது. இந்நிலையில் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
தொடர்ந்து இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு தொடரப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீது இன்று நடந்த விசாரணையில், தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுபற்றி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.